Monday, June 22, 2026
Home Uncategorized கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!

கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!

புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து தயாரித்திருக்கும்  “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
 
“ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் என்னவாக இருக்குமென்ற?” சிந்தனையை மையக் கருவாக  உருவாகியுள்ள இந்த பாடல், கோபத்தையும்,வஞ்சத்தையும் நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உன்னத கருத்தை பொட்டில் அடித்தாற் போல் பேசுகிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் ஒவ்வொரு காட்சியிலும், வரிகளிலும் வலிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

புஷ்பநாதன் ஆறுமுகம் எழுதி, இயக்கியுள்ள இந்த பாடல், வாழ்க்கையில் சந்திக்கும் அவமானங்களும், வலிகளும், நிராகரிப்புகளும் நம்மை பழிவாங்க இயக்குபவையல்ல. மாறாக, வெற்றி பெற்று வாழ்ந்து காட்டுவதுதான் உண்மையான பதில் என்ற வலுவான கருத்தை எடுத்துரைக்கிறது.

முன்னணி இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனிடம், மகாராஜா திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய புஷ்பநாதன் ஆறுமுகம், தனது தனிப்படைப்பாக இந்த பாடலை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், போராட்டங்களிலிருந்து பெற்ற புரிதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படைப்பை உருவாக்கியுள்ளார்.
 
பிரபல இயக்குநரும், நடிகருமான அருண் ராஜா காமராஜ், இந்த பாடலை பாடியிருப்பதுடன், முற்றிலும் மாறுபட்ட “சாத்தான்” வேடத்தில் நடித்துள்ளார். சிவப்பு நிற உடையுடன், சாத்தானை பிரதிபலிக்கும் வித்தியாசமான தோற்றமானது, பாடலை பார்த்து முடித்த பின் நம் மனதுடன் நாமே பேசும் உணர்வை உருவாக்கியுள்ளது, ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாடலின் கருத்துக்கு ஏற்ற துள்ளல்இசையும், துடிப்பான பின்னணி ஒலிகளும் பாடலின் உணர்வை மேலும் உயர்த்தியுள்ளன.
ஒளிப்பதிவை விஷ்ணு மணி வடிவு, படத்தொகுப்பை தின்சா, கலை இயக்கத்தை எஸ்.ஜி. திவாகர் கவனித்துள்ளனர். நடன அமைப்பை சுரேந்திரன் ஜோ மேற்கொண்டுள்ளார். மாங்கோ போஸ்ட் நிறுவனம் கலர் கோர்ப்பு பணியையும், ரேமேக்ஸ் ஸ்டுடியோ மற்றும் பிக் செல் பேக்டரி நிறுவனம் அனிமேசன் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். படக்குழுவின் தொழில்நுட்ப பங்களிப்பு பாடலின் உணர்வை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளது. ஐஸ்வர்யா ரகுநாத் ஆடை வடிவமைப்பிலும், ரதி ராதிகா சாத்தானாகவே அருண்ராஜா காமராஜை மேக்கப்பின் மூலம் உருவாக்க உழைத்திருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது.

மொத்தத்தில், “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் பழிவாங்கும் எண்ணத்தை வெற்றியாக மாற்றும் வாழ்க்கைப் பாடத்தை வித்தியாசமான காட்சியமைப்பிலும் சக்திவாய்ந்த இசையிலும், வீரியமிக்க வரிகளிலும் உருவாகியுள்ளது. வெளியான குறுகிய காலத்திலேயே சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த பாடல், இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற படைப்பாக மாறியுள்ளது.

🔗https://youtu.be/6cY-B-GDYoo

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments