Monday, July 27, 2026
Home Uncategorized ஏழை எளிய மாணவர்களுடன் 'ஜிங்கிள் பெல்ஸ்' கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - ரெய்ன்ட்ராப்ஸ் சமூக அமைப்பு ஏற்பாடு

ஏழை எளிய மாணவர்களுடன் ‘ஜிங்கிள் பெல்ஸ்’ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ரெய்ன்ட்ராப்ஸ் சமூக அமைப்பு ஏற்பாடு

கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு Raindropss Charity Foundation, வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம், ஆனந்தம் இல்லம் இணைந்து Jingle Bells Be a Santa என்ற உணர்வுப்பூர்வமான பயண நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தனர். ஆதரவற்ற குழந்தைகள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளை நீண்ட தூர சுற்றுலா அழைத்துச் செல்வதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். வி.ஜி.பி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷம் அவர்கள் மற்றும் வி.ஜி.பி குழுமத்தின் முதன்மை இயக்குனர் வி.ஜி.பி. ராஜதாஸ் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சுற்றுலா பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். செஸ், சேவாலயா மற்றும் ஆனந்தம் கல்வி மையத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள், திருநங்கை தோழிகள், பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள் பலரும் தங்கள் வாழ்நாளில் முதல் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு இன்பமான தருணங்களை இனிதே கொண்டாடினர். சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் மூலம் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். பயணத்தின் போது குழந்தைகளுக்கு உணவு, நொறுக்குத் தீனிகள் வழங்கப்பட்டது. சான்டா கிளாஸ் உடை அணிந்த ரெயின்ட்ராப்ஸ் குழுவினர் பலரும் குழந்தைகளை ஆடிப் பாடி மகிழ்வித்தனர். நெல்லையில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு சென்ற குழந்தைகள் பண்டைய கால தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட பல வரலாற்று சின்னங்களை பார்வையிட்டனர். பல்வேறு அரிய தகவல்களை கண்டு, கேட்டு தெரிந்து கொண்டனர். புதுமையான முறையில் குழந்தைகளுக்கான சிரிப்பு யோகா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலியின் முதல் பெண் காவல்துறை ஆணையாளர் மகேஷ்வரி அவர்களை குழந்தைகள் சந்தித்துப் பேசினர். காவல் ஆணையாளர் மகேஷ்வரியின் உற்சாகமூட்டும் கருத்துக்கள், வளரும் குழந்தைகள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள, பெரும் கனவை எட்டிப் பிடிக்க, உத்வேகம் கொடுக்கும் வகையில் அமைந்தது. அதைத் தொடர்ந்து, குழந்தைகள் கன்னியாகுமரி கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தென் குமரியில் வானுயர காட்சியளிக்கும் அய்யன் திருவள்ளுவரின் சிலை கண்டு வியந்த குழந்தைகள், கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர். நீண்ட பயணத்தின் நெகிழ்ச்சியான நினைவுகளை மனதில் சுமந்தபடி குழந்தைகள் சென்னைக்கு திரும்பினர். தங்கள் வாழ்நாளில் சுற்றுலா என்பதே பெரும் கனவாக இருந்தது, நீண்ட கால ஆசையை நிறைவேற்றிய ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பிற்கும், வி.ஜி.பி. தமிழ் சங்கம் மற்றும் ஆனந்தம் இல்லத்திற்கும் நன்றி என குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் பலரும் மகிழ்ச்சி பொங்க கூறினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments